
''விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சிறப்பாக விளையாடுங்கள். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்'' என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு வாரிய தலைவர் மானி ஆறுதல் தெரிவித்தள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் மட்டமான திறமையை வெளிப்படுத்திய அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருக்கிறது. இதுவரை 5 போட்டிகளில் ஆடிய அந்த அணி மொத்தமே ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பாயின்ட்ஸ் டேபிளை பொறுத்தளவில் பாகிஸ்தான் மொத்தம் உள்ள 10 நாடுகளில் 9-வது இடத்தில் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் படுமோசமாக விளையாடினர். மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைக்கு ஆட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
இதன்பின்னர் வீரர்களை எச்சரித்த கேப்டன் சர்ப்ராஸ் அகமது, மோசமாகி விளையாடி நாட்டுக்கு திரும்பினால் மக்கள் நம்மை சும்மா விடமாட்டார்கள் என்று எச்சரிக்கை செய்திருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஹ்சான் மானி கேப்டன் சர்ப்ராஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரிடம், விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு ஆதரவாக நாடு இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் இணைய தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
புள்ளிப் பட்டியிலில் கடைசியில் இருந்து 2-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. இனி எப்படிப்பார்த்தாலும் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பில்லை.