
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தான் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு 16 லட்சம் ரூபாய் டிப்ஸ் அளித்து அதிர வைத்துள்ளார்.
ரஷ்யாவில் நடைப்பெற்ற ஃபிபா கால்பந்து உலக கோப்பை போட்டிகளை தொடர்ந்து, நண்பர்கள், குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டிற்கு ரொனால்டோ சுற்றுலா சென்றுள்ளார். கோஸ்டா நவரினோ என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ரொனால்டோவிற்கு, அந்த ஹோட்டல் ஊழியர்கள் சிறப்பு விருந்தோம்பல் அளித்துள்ளனர். ஊழியர்களின் கவனிப்பால் மகிழ்ச்சியடைந்த ரொனால்டோ, ஹோட்டலில் இருந்து கிளம்பும் போது 17 ஆயிரத்து 850 யூரோவை டிப்ஸ் ஆக அளித்துள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில், 16 லட்சத்திற்கும் அதிகமாகும். இதனால், ஹோட்டல் ஊழியர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.
முக்கியமாக, 5 முறை பாலன்'டி'ஓர் விருது பெற்றுள்ள ரொனால்டோ, புதிய க்ளப் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் தொடரின் முன்னனி க்ளப் ரியல் மேட்ரிடில் இருந்து, யுவெண்டஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அவர்.
கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மேட்ரிட் அணிக்கு விளையாடி வரும் ரொனால்டோவை, 850 கோடி ரூபாய்க்கு, இத்தாலியின் யுவெண்டஸ் அணி ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய அணியில் ஏலம் எடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரொனால்டோ, "மற்ற வீரர்களை காட்டிலும், நான் வித்தியாசமானவன். என்னுடைய 33 வயதில், உலகின் முக்கிய அணிகளில் ஒன்றான யுவெண்டஸ் அணிக்கு விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
இதுவரை ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, நான்கு முறை அந்த அணியை சாம்பியன்ஸ் லீக் தொடரைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தங்கள் அணியில் இருந்து விலகியதால், ரியல் மேட்ரிட் அணி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
(With AFP Inputs)